Freehand Rangoli
- 2021- Home Kolams....
- 2021- Home Kolams
- 2021- Mother's Day.....Sharing an old rangoli......
- 2021-Shri Rama Navami.....
- Lotus
- Peacock
- Flowers
- 021- Tamil New Year... பச்சை மயில் வாகனனே சிவ பால சுப்ரமண்யனே வா இங்கு இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில் எள்ளளவும் ஐயமில்லையே I have surrendered unto the Lord who rides the green peacock.... And.... I don't have any fear whatsoever...
- Freehand
- Home Kolams
தாய்மை என்னும் தூய அன்பு கங்கை.....கடவுள் தன் கருணையை அனைவரும் ப்ரத்யட்சமாக அனுபவிக்க அனுப்பி வைத்த புனிதம்.....த்யாகம் என்பது அவள் வாழ்க்கை முறை.....வழிகாட்டல் என்பது இயல்பான நடைமுறை...பக்தியென்னும் இசைக்கு குருவாய் அமைந்து, திருத்தித் திருத்தி மெருகேற்றும் மேன்மை இதயம் என்பது பூவாய் மலர்ந்து விடும் மென்மை.......விழி தந்து வண்ண உலகைப் பார்க்க வைத்து, மொழி தந்து, எங்கும் பாலம் அமைத்து, வழி தந்து நடக்க வைக்கும் இன்பம்......... நம் குறைகளே தெரியாத, தெரிந்தாலும் மன்னித்து விடுகின்ற நிறை குடம்........தள்ளாடும் தளர்நடை ரசித்தவள்...........முள்ளாடும் பாதைகளில் எச்சரிக்கையானவள்.நம் உள்ளாடும் நற்பண்புகளுக்கெல்லாம்ஊற்றுக் கண் ஆனவள்.........உறவின் இழைகளை பலப்படுத்தி உற்ற துணை ஆக்கியவள்..........இன்றைய நம் வாழ்வுக்கு, அன்றே வடிவம் தந்து வண்ணம் ஏற்றியவள்.எண்ணமெல்லாம் நீ தான் அம்மா........ஏற்றமெல்லாம் உன்னால் அம்மா.......
பொங்கி வழியும் உள்ளத்திற்கு வடிகால் அமைத்து உன்னைப் போற்றத் தாய் மொழியிலும் போதிய சொற்கள் இல்லையே தாயே......தாள் பணிகின்றோம்.......ஜானகி ரமணன் புனே
ஜன்ம ரட்சக மந்திரமே, ஜனனம் ஆன ராம நவமி. தர்மத்தின் முழுமையான வடிவம் , ரம்மியமான நாமம் தாங்கி வந்துதித்த| புனித தினம். பாற்கடலே பொங்கி வந்து பாரினை மேம்படுத்திய தினம். ராமா, ராமா என்று உருகி மனித குலம் கடைத்தேற , தினகரக் கொழுந்தாய் வந்தான். அன்பென்றால் உலகளாவ விரிந்திருக்க வேண்டும். பரிவென்றால் கடலாய் பரந்திருக்க வேண்டும். அது அகத்தில் ஊற்றெடுத்துப் பார்வையாய் மலர வேண்டும். பண்பென்றால் சிகரம் தொடவேண்டும். கடமை என்பது யாகக் கனல் போல் கையாளப்பட வேண்டும். தாயே கோயில், தந்தை சொல்லே மந்திரம் என்பது வாழ்க்கையின் அடித்தளமாக ஆக வேண்டும். உறவை ,நட்பை , ஒவ்வொரு இழையாய்ப் பார்த்துப் பார்த்து பின்ன வேண்டும் -- எனக் காட்டிக் கொடுத்தவன். சத்தியம், தர்மம் இரண்டு விழிகளாய்க் கொள்ளச் சொன்னான். சின்னச் சின்ன விஷயங்களில், பெரிய பெரிய, எண்ணங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்றான். அவன் காடுமேடுகளில் நடந்ததெல்லாம், நம்மைச் சம்சாரக் காட்டிலிருந்து விடுவிக்கத் தான். ஒரே பாணத்தில் ஆயிரமாயிரம் அசுர குணங்களை அழிக்கத் தான். மனித இனம், விலங்கினம் என்ற தளைகள் அகற்றி, உயிரினம் என்று கொண்டாடும் உன்ன்தம் உணரத்தான். ஆட்சி என்பது எப்படி அமைய வேண்டும் என வேந்தருக்குக் காட்டத்தான். முடியாட்சி என்ற பெயரில் அது குடியாட்சி தான் என மக்களை முன்னிலைப் படுத்தும் மாண்புதான். மனவளம், நிலவளம் செழிக்க வைத்தான். இன்பமும், அமைதியும் தழைக்க வைத்தான். புருஷோத்தமனே, உத்தம புருஷனாய் உதித்த அவதாரம். அவன் போட்டு வைத்த லஷ்மண ரேகைகள் அனந்தம். அவற்றை மீறாமல் கட்டுக்குள் வாழ்ந்தால் ஆனந்தம். தீனதயாளா, தினகரச் சுடரே, ராமா, சரணம் சரணம்- Mrs. Janaki Ramanan, Pune
சித்திரைப் பெண்ணாள் பரிவுடன் சிரித்து வருகின்றாள்
முத்திரை பசும்பொன்னாய்
ஒளிமழை சிந்தி வருகின்றாள்.
பொங்கும் இன்பக் கடலாய் ஆடி வருகின்றாள்.
மங்கல முத்துச்சுடர்கள் ஏந்தி வருகின்றாள்.
இருளைக் கலக்கி விரட்டும் கதிராய் வருகின்றாள்.
மருள் தரும் நோயெனும் தீயை மாய்க்க வருகின்றாள்
இவள் கருணைக்கு முன் சிறுமைகள் நிற்பதில்லை.
ராம பாணத்தின் முன் அற்ப ஜந்துக்கள் நிலைப்பதில்லை. பக்தியை எதிர்த்து எதுவுமே என்றுமே வென்றதில்லை .
சக்திகள் தோற்றதாய்
சரித்திரமே இல்லை.
மற்றவருக்காய் மனம் உருகி வேண்டுவது வீண்போவதில்லை.
சுயநலங்கள் சுருண்டு போகட்டும்.
மாசுகள் தூசாய் அடித்துச் செல்லப்படட்டும்.
புத்துணர்வுப் பூக்கள் பாரெலாம் மலரட்டும்.
புதிதான உதயம் விடிவெள்ளியாய் புலரட்டும்.
கைகோர்த்து புவனம் அதை வரவேற்கட்டும்.
தமிழ் போலும் வளமான, இன்பமயமான ஆண்டு துவங்கட்டும்.
ஆண்டவன் அருள் அனைவரையும் காக்கட்டும்.
Mrs. Janaki Ramanan- Pune